சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையம் மூலம் உலாவ விடும் செய்திகள் மூலம் மக்களின் மன நிலையை மாற்ற முடியுமா? என்பது குறித்த உளவியல் சோதனையில் ஃபேஸ்புக் நிறுவனம் ரகசியமாக ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணைய தளங்கள் மூலம் அமெரிக்கா உலக நாடுகளை காண்காணித்து உளவு வேலையில் ஈடுபட்டு வந்ததை எட்வார்ட் ஸ்னோடன் உலகிற்கு அம்பலப்படுத்தினார். இது உலக அளவில் மிகப் பெரிய அளவில் அதிர்வை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் தங்களின் தளத்தில் உலாவிடும் செய்திகள் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவோரின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதா? அப்படி ஏற்படும் மாற்றம் செய்தியின் தன்மைக்கேற்ப மாறுபடுகிறதா? அதே போல் செய்திகளைகொண்டு மக்களின் கவனத்தை திசைதிருப்பி கொண்டு செல்லமுடியுமா என்பது உள்ளிட்டபல்வேறு ரகசிய உளவியல்ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அதுவும் ஃபேஸ்புக் பயன்படுத்தும் 7 லட்சம் பேரின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த இந்த ஆய்வு ஒரு வார காலம் நடத்தப்பட்டிருக்கிறது. இது எதுவும் அதனை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. முதலில் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு செய்தியை ( நியூஸ் ஃபீட் ) வெளியிடுவது. அந்த செய்தியை படிக்கும் பயனாளி, அடுத்து அவர் பதிவு செய்யும் இடுகை செய்தியின் தன்மைக்கேற்ப மாறுபட்டிருந்திருக்கிறது.
அதாவது முதலில் ஒரு நல்ல செய்தியை வெளியிடுவது. அதனை படிக்கும் பயனாளி அதற்கேற்றவாறு நல்ல விதமான பதிவுகளை செய்திருக்கிறார். அடுத்ததாக ஒரு தீயை செய்தியை வெளியிட்டு, அதன் மூலம் எதிர்மறையான கருத்தை உருவாக்கியிருக்கின்றனர். அதனை படித்த அதே பயனாளி எதிர்மறையான கருத்தையே பதிவு செய்திருக்கிறார்.
இதன் மூலம் ஃபேஸ்புக்கில் வெளியிடும் ஒரு செய்தியின் தன்மையை கொண்டு பயனாளிகளின் மனநிலையையும் மாற்ற முடியும் என்பது தெரிய வந்திருக்கிறது. இந்த உளவு சோதனை ஒருவாரகாலம் 7 லட்சம் பயனாளிகளின் ஃபேஸ்புக் பக்கத்தில், பயனாளிகளுக்கே தெரியாமல் நடத்தப்பட்டிருக்கிறது. சோதனையின் முடிவில் செய்திகளை கொண்டு பயனாளிகளின் மனநிலையை, தங்களின் வசதிகேற்ப மாற்ற முடியும் என முடிவுக்கு வந்திருக்கின்றனர். இந்த சோதனையை முழுக்க முழுக்க ரகசியமாகவே ஃபேஸ்புக் நிறுவனம் நடத்தியிருக்கிறது.
ஆய்வின் முடிவுகளையும் ரகசியமாகவே வைத்திருக்கிறது. இதனை வைத்து மிக பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் அவர்களின் பொருட்கள் குறித்து கவர்ச்சியை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிட்டு, அதன் மூலம் மக்களை அந்த பொருட்களின் நுகர்வோர்களாகவும் மாற்ற முடியும். அதே போல் ஒரு நாட்டில் அரசின் கருத்தையோ, அல்லது அரசிற்கு எதிரான கருத்தையோ கொண்டு செல்ல இந்த வழிமுறையை பின்பற்ற முடியும்.
இப்படி ஆபத்து நிறைந்த ஓர் உளவியல் சோதனையை ஃபேஸ்புக் நிறுவனம் நடத்தியிருப்பது, ஃபேஸ்புக் பயனாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ரகசிய உளவியல் ஆய்வு நடவடிக்கையும் கூட, அமெரிக்க ஆய்விதழில் ஒன்றில் இந்த ஆய்வு குறித்த கட்டுரை வெளியானதில் இருந்தே தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பயனாளிகள் தங்கள் நியூஸ் ஃபீடில் படிக்கும் செய்தியின் தன்மை, அவர்கள் மனநிலையை பாதிக்கிறது என்பதே இந்த ஆய்வின் முடிவாக அமைந்தது என அந்தகட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வழக்கமான ஆய்வுதான் ஃபேஸ்புக் நிறுவனம் இந்த விவகாரம் குறித்து பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க் இந்தியாவில் தொழில் முனைவோர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில் தெரிவித்திருப்பதாவது:- இந்த உளவியல் ரீதியான ஆய்வு என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதனை வெளியில் தெரிவித்த விதம்தான் மோசமாக அமைந்து விட்டது.
அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதே போல் இந்த உளவியல் சோதனையை தலைமையேற்று நடத்திய ஃபேஸ்புக் டேட்டா விஞ்ஞானி ஆடம் கிராமரும், பயனாளிகள் அனுமதியில்லாமல், அவர்களை உளவியல் ரீதியான சோதனைக்கு உட்படுத்தியதற்கு மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
Post a Comment