தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசிர் விக்கினேஸ்வரனைச் சந்திக்க முடியாதுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட விசேட கூட்டம், யாழ். பொது நூலகத்தில் நேற்று காலை நடைபெற்றபோதே கூட்டமைப்பின் தலைவரிடம் நேரடியாகவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இதன்போது, ஜெனிவா மற்றும் இரணைமடு நீர்த் திட்டம மற்றும் மாகாண சபை தொடர்பிலே ஆராயவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இரணைமடு குடிநீர் திட்டம் தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர், மதிய இடைவேளையுடன் கூட்டத்திலிருந்து முதலமைச்சர் வெளியேறியிருந்தார்.
இதன்பின்னர் மாகாண சபை தொடர்பாக ஆராயப்பட்டபோது முதலமைச்சர் இல்லாமல், எதனைப் பற்றி பேசுவதென்றும், யாருடன் கலந்துரையாடுவதென்றும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியதுடன், இதே போன்றதான நிலையே மாகாண சபை உறுப்பினர்களுக்கு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.
அத்தோடு இங்குள்ள மக்களும் முதலமைச்சரைச் சந்திப்பதில் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகவும், இதனால் பலர் சந்திக்க முடியாமல் திரும்பிச் செல்வதாகவும் இது தொடர்பில் தம்மிடமே அதிகளவானோர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தருந்தனர்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கட்சித் தலைமை மௌனம் காத்ததுடன், முதலமைச்சர் வெளியேறியதற்கான காரணங்களும் தெரிவிக்காமல் கூட்டத்தை நிறைவு செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களை விடவும், கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததுடன், தாம் பெரும் சிரமங்களுக்கு மத்தியிலும் கிழக்கிலிருந்து இங்கு வந்திருந்தும் பலனில்லை என்றும் குறிப்பிட்டமையும் குறிப்பிடத்தக்கது
Post a Comment