யாழ்ப்பாணக் குடாக்கடலில் தடை செய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு அந்தந்தப்பகுதி கடற்றொழிலாளர்களைச் சந்தித்து அவர்களது ஆலோசனைகளையும் பெற்று மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. என்று யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் அமைப்புக்களின் சம்மேளனத்தின் உபதலைவர் அ.எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: யாழ்.மாவட்ட கடல் வளத்தைப் பாதுகாப்பதற்காக நீரியல் வளத் திணைக்களம் மற்றும் கடலோரக்காவல் படையினர் ஆகியோருடன் இணைந்து தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைக்கையில் ஈடுபடுவதற்கு யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் அமைப்புக்களில் இருந்து குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக்குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கையாக அந்தந்த கிராமிய அமைப்புக்களைச் சந்தித்து பிரதேசம் சார்ந்த மீன்பிடிப் பிரச்சினைகளை கேட்டறியவுள்ளனர்.
யாழ்.மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் அமைப்புக்களின் சம்மேளனங்கள் இணைந்து கடந்த 7 ஆம் திகதி கடல் வளத்தைப் பாதுகாப்பதற்காக நீரியல் வளத்திணைக்களத்தால் தடை செய்யப்பட்ட தொழில் முறைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைக் குழு ஒன்றைத் தெரிவு செய்துள்ளதுடன் குறித்த குழு செயற்பாட்டிலும் இறங்கியுள்ளது.
இதனடிப்படையில் தடை செய்யப்பட்ட தொழில் உபகரணங்களைப் பயன்படுத்தி கடற்றொழிலை மேற்கொள்வோர் கடந்த 15 ஆம் திகதியுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த தீர்மானத்தை தொழிலை மேற்கொள்வோர் மதிப்பதாகத் தெரியவில்லை. எனவே குறித்த குழுவினர் யாழ் மாவட்டத்தில் உள்ள சங்கங்கள் ஊடாக அங்குள்ள தொழிலாளர்களை நேரடியாகச் சந்தித்து தடை செய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கோரவுள்ளனர். எனினும் அதனையும் மீறி சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment