தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஒழுங்கமைக்கப்பட்ட விசேட கூட்டம் ஒன்று தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், அதில் ஜெனீவா விவகாரத்தினை திட்டமிட்டு தலைமை புறக்கணித்துவிட்டதாக தெரிவித்து அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளிநடப்பு செய்துள்ளார்.
காலை கூட்டம் தொடங்கியது முதல் ஜெனீவா கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் மற்றும் பரப்புரைகளை மேற்கொள்ள குழு நியமனம் என்பவை பற்றி பல தடைவைகளாக சிறீதரன் பேசியிருந்தார். எனினும் நிகழ்ச்சி நிரலை வகுத்திருந்த கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா, அதனுள் ஜெனீவா விவகாரத்தை பற்றி மூச்சு கூட விடுத்திருக்கவில்லை. தேவையாயின், அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த பின்னர் நேரமிருந்தால் ஜெனீவா பற்றி பேசலாமென்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே அங்கு குறுக்கிட்ட சிறீதரன் கடந்த இரு அமர்வுகளின் போதும் தான் பங்கெடுத்து பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன், இலங்கைக்கு ஆதரவளிக்கும் நாடுகளிடையே மனமாற்றத்தை ஏற்படுத்த கூட்டமைப்பு பிரச்சாரங்களை முன்னெடுக்க கேட்டுக்கொண்டார். எனினும் அதனை கூட்டமைப்பு தலைமை பொருட்படுத்தாதனையடுத்து சிறீதரன் வெளிநடப்பு செய்திருந்தார்.
Post a Comment