புனர்வாழ்வுக்கு பதிலாக 12,000 தோட்டாக்களே செலவழிந்து இருக்கும் என்று இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர சொன்ன கருத்தினை சுட்டி காட்டி பேசும் போதே அக்கூற்றினை அவர் வாபஸ் பெறவேண்டும் என்று கண்டனம் தெரிவித்ததுடன், மந்த கதியில் நடைபெற்று வரும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் பற்றியும் விசனம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,நேற்றைய தினம் முல்லைத்தீவில் புனர்வாழ்வு அமைச்சினால் இழப்பீடுகளுக்கான சில கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர், புனர்வாழ்வு அதிகார சபை தலைவர் , புனர்வாழ்வு அதிகார சபை பணிப்பாளர், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வின் முதல் கட்டம் முள்ளியவளையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ரவிகரனுக்கு கேள்வி கேட்க சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில், 2வது கட்ட நிகழ்வு செல்வபுரத்தில் நடைபெற்ற பொழுது அங்கும் விஜயம் செய்த ரவிகரன் தொடுத்த மூன்று கேள்வியும் அவர்களை நிலை தவற செய்ததுடன், அவர்களால் பதிலளிக்க முடியாத சூழ்நிலையையும் உருவாக்கி விட்டது.
புனர்வாழ்வுக்கு பதிலாக 12,000 தொட்டாக்களே செலவழிந்து இருக்கும் என்று மேற்படி அமைச்சர் கூறிய கருத்தை சுட்டிக்காட்டிய ரவிகரன், பொறுப்பு வாய்ந்த ஒருவர் இப்படி சொன்னால் மக்களுடன் எங்ஙனம் நல்லிணக்கம் ஏற்படும் என்றும், அப்படி ஒருவரால் எங்ஙனம் மக்களுக்கு சேவை ஆற்ற முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் இது தொடர்பில் அவர் மாற்று சிந்தனையை கொண்டிருத்தல் அவசியம் எனவும், அவரால் கூறப்பட்ட அக்கூற்று வாபஸ் பெறப்படவேண்டியது எனவும் ரவிகரன் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கு தொழில் வாய்ப்பு வசதிகள் இன்னும் பூரணமாக செய்து கொடுக்கப்படவில்லை. வீட்டு அழிவுகளுக்கான கொடுப்பனவுகள் 4 வருட காலம் கடந்தும் இன்னும் அதிகமானவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கவும் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் ரவிகரன் அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த புனர்வாழ்வு அமைச்சரின் ஆலோசகர், குறித்த அமைச்சர் ஒருவர் அவ்வாறு கூறி இருந்தால் அது பிழையே என்று தெரிவித்தார். பிற்பகல் நடைபெறும் கூட்டத்தில் மேற்படி கேள்விகளுக்கு புனர்வாழ்வு அமைச்சர் பதிலளிப்பார் என்று கூற கூட்டமும் நிறைவு பெற்றது.
இதனைத் தொடர்ந்து பிற்பகல் கரைத்துறைப்பற்று பிரதேச செயலக மக்கள் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பதிலளித்த புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, சென்ற முறை புனர்வாழ்வுக்கென 300 மில்லியன் ஒதுக்கப்பட்டதாகவும், இம்முறை 500 மில்லியன் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கான தொழில் வாய்ப்பு வசதிகளும், வீட்டு அழிவுகளுக்கான கொடுப்பனவுகளும் நிறைவேற்றப்படும் என்று கூறிய போதிலும், அமைச்சர் அமரவீரவின் கூற்று தொடர்பில் கருத்து தெரிவிப்பதை தவிர்த்து கொண்டார்
Post a Comment