யாழ் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணர் வைத்திய கலாநிதி சுரேஸ் மற்றும் அவரின் துணைவியாரும் கிளிநொச்சி மலையாளபுரம் அன்னை சாரதாதேவி வித்தியாலயத்தின் தேவைகளைக் கேட்டறிந்து உதவி செய்துள்ளனர்.
கிளிநொச்சி மலையாளபுரம் அன்னை சாரதாதேவி வித்தியாலயம் கடந்த பன்னிரண்டாம் திகதி புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வை நடாத்தியது.
இதில் பிரதம விருந்தினராக பா.உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டு மாணவர்களை மதிப்பளிப்பளித்தபின் மேற்படி பாடசாலையின் வளப்பற்றாக்குறை தொடர்பாக தனது பேச்சில் சுட்டிக்காட்டியதோடு, அதை தமிழ்வின் ஊடகவாயிலாக வெளியுலகிற்கு கொண்டு வரச்செய்யப்பட்ட பின் அவை உள்ளூர் ஊடகமான வலம்புரி போன்ற பத்திரிகைகளிலும் முதன்மைபடுத்தப்பட்டது.
இதை வாசித்த யாழ். போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணர் வைத்திய கலாநிதி சுரேஸ் மற்றும் அவரின் துணைவியாரும் அன்னை சாரதாதேவி வித்தியாலயத்தின் தேவைகளை கேட்டறிந்து அதனடிப்படையில் நீர் மற்றும் மின்சார இணைப்பு வசதிகளை மேற்கொள்ள தீர்மானித்து இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட நிதியை பாடசாலைக்கு வழங்கியுள்ளனர்.
தற்போது அத்தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்ட நிலையில் வைத்திய கலாநிதி சுரேஸ்குமார் தம்பதிகளின் புதல்வியான செல்வி மயூரகியின் பன்னிரண்டாவது பிறந்த நாளில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வு பள்ளியின் அதிபர் கணேஸ்வரநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் விருந்தினர்களாக வைத்தியகலாநிதி சுரேஸ்குமார் தம்பதிகளும் மகள் மயூரகியும் கலந்துகொண்டனர்.
சிறப்பு அழைப்பின்பேரில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் வணபிதா.துரைரட்ணம், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலை சமுகத்தினர் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கரைச்சி பிரதேச அமைப்பாளருமான பொன்.காந்தன், த.தே.கூட்டமைப்பின் கிளிநொச்சி இளைஞர் அணியின் செயலாளர் சர்வானந்தா ஆகியோரும் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வில் செல்வி.மயூரகியினால் நீர் வழங்கல் மற்றும் மின்சார இணைப்பு என்பன ஆரம்பித்து வைக்கப்பட்டது.அத்துடன் அவர் பிறந்த நாள் கேக் வெட்டி அனைவருடனும் மகிழ்ச்சி பகிர்ந்துகொள்ள பள்ளி சமுகமும் விருந்தினர்களும் செல்வி மயூரகியை வாழ்த்தினர்.
இதில் கலந்துகொண்டு வாழ்த்துரைத்த பா.உறுப்பினர் சி.சிறீதரன்,
இன்று நடைபெற்ற இந்த நிகழ்வு ஒரு பிறந்த நாள் நிகழ்வு அல்ல. இச்சமுகத்திற்கான முன்னுதாரணமான நிகழ்வு. பலர் கொண்டாட்டங்கள், களியாட்டங்கள் என்ற பேரில் பணத்தை வீண்விரயம் செய்யும் இக்காலத்தில் வைத்தியகலாநிதி மகப்பேற்று நிபுணர் சுரேஸ்குமாரின் குடும்பத்தினர் தமது பிள்ளைகளின் பிறந்த நாட்களை தொடர்ந்து இப்படி நல்ல எண்ணத்துடன் மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைத்து மகிழும் பண்பு மிகவும் பாராட்டத்தக்கது.
இந்த தந்தை தாயின் இந்த நல்லெண்ணத்துடனேயே அவர்களின் பிள்ளைகளும் எதிர்காலத்தில் மக்களுக்கு தொண்டாற்றும் நற்பிரஜைகளாக உருவெடுப்பார்கள்.இவர்களின் இந்த உதவியை இந்த பள்ளிச் சமூகமும் நாமும் என்றும் மறக்கமாட்டோம் என குறிப்பிட்டதுடன் செல்வி.மயூரிகாவிற்கு தன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
Post a Comment