காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றாக நிராகரிப்பதாக கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் யாழ். பொது நூலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்த வெளியிட்ட சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜெனிவாத் தீர்மானம் மற்றும் இரணைமடு குடிநீர்த் திட்டம் மற்றும் மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதற்கமைய, ஜெனிவாவிற்கு செல்வதற்காக அமைக்கப்பட்ட விசேடக் குழுவின் அடிப்படையில், இதற்குரிய நடவடிக்கைகளை மிக வேகமாக முன்னெடுத்தல்.
இரணைமடுக் குடிநீரை யாழிற்கு கொண்டு வருவதற்கு முன்னர், அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படல் வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே நீரைக் கொண்டு வருவது தொடர்பில் பரிசீலித்தல்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்றும், இது ஏமாற்றும் நடவடிக்கை என்பதால் அடியோடு நிராகரிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் மற்றும் இதற்குள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் முதலமைச்சர் உள்ளிட்ட தரப்பினர்கள் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டு சில சாதகமான முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment