தாயகத்தில் வாழும் தம் உறவுகளின் கல்வி மேம்பாட்டுக்கு உதவும் நோக்குடன் நோர்வே அஸ்கர் பாறும் இணையம் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கும் நிகழ்வு பூநகரி செம்பன்குன்று முன்பள்ளியில் இடம்பெற்றது.
இங்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஆலோசனையின்படி அச்சிடப்பட்ட கிளிநொச்சி மண்ணின் மூத்த சேவையாளர்களின் திருவுருவப்படங்கள் பொறிக்கப்பட்ட அப்பியாசக் கொப்பிகளை பா.உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளருமான மாவை சேனாதிராஜா வழங்கி வைத்தார்.
மேலும், கட்சியின் பொருளாளரும் கனகசபாபதி வடமாகாணசபை உறுப்பினருமான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம், கிளிநொச்சி மாவட்ட கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் சுரேன், மாவட்ட கட்சி அமைப்பாளர் வேழமாலிகிதன், கட்சியின் கரைச்சி பிரதேச அமைப்பாளரும் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளருமான பொன்.காந்தன், பா.உறுப்பினர் மாவை. சேனாதிராஜாவின் செயலாளர் பிருந்தாபன் மற்றும் செம்பன்குன்று கிராம அபிவிருத்தி சங்க தலைவர் உட்பட பலரும் கொண்டு வழங்கி சிறப்பித்தனர்.
இங்கு மாணவச் சிறார்கள் மத்தியில் அறிவுரை பகிர்ந்த பா.உறுப்பினர் சி.சிறீதரன்,எமது மண்ணின் வேர்களான குருகுலபிதா கதிரவேலு அப்புஜி, கருணா நிலைய நிறுவுனர் மியூரியல் வயலட் கட்சின் அம்மையார், நவஜீவன நிறுவுனர் தம்பிராசா போதகர், கிளிநொச்சியின் ஞான ஒளியான யோகர் சுவாமிகள் போன்றோரின் நினைவு திருவுருவப் படங்கள் பொறிக்கப்பட்ட இந்த அப்பியாசக் கொப்பிகளை முதன்முதலில் செம்பன்குன்று மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வழங்கி வைப்பதில் நாம் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.
இன்று இருக்கின்ற சூழ்நிலையில் எமது தனித்துவமான வரலாறுகளை மறக்கவும் மறக்கடிக்கச் செய்யவும் பல்வேறு சதிகளும் இடையூறுகளும் இருப்பதை நாம் எல்லோரும் உணரமுடியும்.
நமது மண்ணில் நமது கிராமத்தில் நமது பள்ளியில் எமது வாழ்வுக்காக உழைத்த எத்தனையோ நல்ல மனிதர்களை மறந்துவிட்டோம். ஆனால் அம்பாந்தோட்டையில் இருந்து வருகிறவனை நாம் தொட்டுவணங்க நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.அயல் இனங்களில் நல்ல மனிதர்களும் ஏராளம் பேர் உள்ளார்கள். எமக்காக குரல்கொடுக்கும் மனிதாபிமானம் உள்ளவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் சின்னத்தனமான அரசியல்களுக்காக எமது கிராமங்களுக்கு வருவதில்லை.
ஆனால் எமது துயர்களுக்கு காரணமானவர்கள் தாம் உத்தமர்கள்பொல நடித்து எமது சிறார்கள்முன் ஆசை வார்த்தைகளை வீசி கதாநாயகர்களாக முனைவதுதான் நமது வரலாற்றை மறக்கடிக்கச் செய்யும் கயமைத்தனம்.ஆயினும் அத்தகைய கயமைத்தனமான அரிசியல் இங்கு செல்லாக்காசாகிவிடும் என்பதை கடந்த தேர்தல்களில் எமது இத்தகைய கிராமத்து மக்கள் ஆணித்தரமாக நிருபித்துள்ளார்கள்.
எனவே இத்தகைய கொள்கை வழுவாத கிராமத்து இளம் சந்ததியிடம் எமது மண்ணின் வேர்களை விதைப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கின்றோம்.இவர்கள் இந்த கிராமத்து வரலாற்றை. மண்ணில் வரலாற்றை அதற்காக உழைத்த மனிதர்களை மனதில் கொண்டவர்களாக வாழ தலைப்படுவார்கள் என நம்புகின்றோம்.மண்ணின் வேர்களை மதிக்கிற சமுதாயத்தை பல்வேறு வழிகளுடாக நாம் உருவாக்க செயற்படுவோம் என கூறினார்.
Post a Comment