அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் முதலீட்டாளர்கள், தமது தொழிற்துறை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பொருட்டு, ஆரம்ப கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். அச்சுவேலி, கைத்தொழிற்பேட்டை வளாகத்தில் நேற்றைய தினம் (01) இடம்பெற்ற தொழிற்துறை முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலின் போது அவர் இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.
இதன்போது, தொழிற்துறை முதலீட்டாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகளின் போது எதிர்நோக்கும் இடர்பாடுகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, பிரதேச சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை, தொழிற் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றினது அனுமதிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், முதலீட்டாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பொருட்டு, ஆரம்ப கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அதன்போது எதிர்நோக்கப்படும் இடர்பாடுகள் தொடர்பிலும், துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்டதுடன், அவை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்தார்.
இதனிடையே, தொழிற்துறை முதலீட்டாளர்களுக்கான காணிப் பங்கீடுகள் மற்றும் வங்கிகள் ஊடான இலகுக் கடன் திட்டங்கள் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.இந்நிலையில், 07 வெவ்வேறு தொழிற்துறை முதலீட்டாளர்களுக்கான காணிப் பங்கீடுகள் தொடர்பில் அமைச்சர் அவர்கள், துறைசார்ந்தோர் ஊடாக நேரில் ஆராய்ந்து அறிந்து கொண்டார்.
இதன்போது, கோப்பாய் பிரதேச செயலர் பிரதீபன், கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பிரதிப் பணிப்பாளர் சிவகங்காதரன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகஸ்தர் ஜீவபாபு, ஈ.பி.டி.பி.யின் கோப்பாய் பிரதேச இணைப்பாளர் ஐங்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
Post a Comment