முல்லைத்தீவு குமுளமுனைப்பகுதியில் உள்ள முறிப்பு குளமானது பல திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசிய நிலையில் உள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கிறார். குறைகேள் மக்கள் சந்திப்பு ஒன்றுக்காக அப்பகுதிக்குச் சென்ற போது, மக்களின் தகவலையடுத்து குளத்தின் நிலையை நேரில் உறுதிப்படுத்திய நிலையிலேயே இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில், இக்குளத்தில் பராமரிப்பு குறைவாக இருப்பதால், குளக்கட்டு கரைகளில் பற்றைகள் வளர்ந்து வீதியை மூடி விடுமோ என்று அஞ்சுகிற வகையில் காணப்படுகிறது.
இது தவிர காலபோகத்தில் 1,200 ஏக்கருக்கு மேல் நீர்ப்பாசன வசதி பெறும் இக்குளத்திற்கு அரை அடி அளவிற்கு கலிங்கையும், குலக்கட்டினையும் உயர்த்தும் பட்சத்தில், சிறுபோகத்திலும் முழுமையான பலனை பெறமுடியும் என அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். இது பற்றிய விடயங்களை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக மக்களுக்கு உறுதியளித்தார்.
Post a Comment