யாழ். மாவட்டத்தில் பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் பண்ணையாளர்களை வட மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ். இந்துக் கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
யாழ். மாவட்டத்தின் பால் பண்ணையாளர்கள், யாழ். மாவட்ட அபிவிருத்திக் கூட்டுறவுக் கழகம் (யாழ் கோ), கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் (லிப்கோ) மற்றும் தனியார் பால் கொள்வனவு நிறுவனங்களுக்கு பால் விநியோகித்து வருகிறார்கள்.
இவர்கள் பசுக்களை வளர்ப்பதில் எதிர்நோக்கும் இடர்ப்பாடுகள் மற்றும் பாலின் தரம், பாலின் விலை நிர்ணயம், பால் விநியோகம் போன்றவற்றில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி அமைச்சருடனான சந்திப்பின்போது கலந்துரையாடப்படவுள்ளதால், பால் பண்ணையாளர்கள் அனைவரையும் தவறாது சமூகமளிக்கும்படி கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி. வ.அமிர்தலிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது அமைச்சருடன் கூட்டுறவு தொடர்பாக முதலமைச்சருக்கு அறிக்கையிடும் பொறுப்பிலுள்ள வட மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன், கால்நடை அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கால்நடை வைத்திய அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
Post a Comment