சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை பெற்றுக்கொள்வதற்கு தேசிய பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அனுமதியளித்துள்ளது. இதற்கமைய 305 ரிபிடர் ரக துப்பாக்கிகளையும் 96 கைத் துப்பாகிகளையும் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பள்ளேகம தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிகளை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிப்பத்திரம் நேற்றைய தினம் கிடைத்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கூறுகின்றார். பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதற்காகவும், சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காகவும் இந்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் தற்போதுள்ள துப்பாக்கிகள் மிகவும் பழமையானவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவற்றில் அநேகமானவை செயலிழந்துள்ளதாக ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment