Home » » தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய சந்திப்பு கூட்டம் ஒத்திவைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய சந்திப்பு கூட்டம் ஒத்திவைப்பு

Written By Namnilam on Friday, April 18, 2014 | 11:47 AM

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டுக் கூட்டம் ஒன்றை நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் அல்லது வவுனியாவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் நேற்றிரவு கடைசி நேரத்தில் அதனை ஒத்தி வைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டது.


இனி, அந்தக் கூட்டத்தை எப்போது, எங்கு நடத்துவது என்பது குறித்து அடுத்து வரும் நாட்களில் தீர்மானித்து அறிவிக்கப்படும் எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இனிப் பெரும்பாலும் அந்தக் கூட்டம் திருகோணமலையிலேயே நடக்கும் எனச் சில வட்டாரங்கள் தெரிவித்தன.


திடீரென இந்தக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு கூட்டமைப்பின் தலைமைப்பீடம் எடுத்த முடிவு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியமையை அடுத்தே இந்தக் கூட்டத்தை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அறிய வந்தது.


ஏற்கனவே யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் இத்தகைய கூட்டுக் கூட்டம் இரண்டு தடவைகள் நடத்தப்பட்டன. இனி, அந்தத் தொடரில் அடுத்த கூட்டத்தை திருகோணமலையில் அல்லது அம்பாறையில் கூட்டுவது என அப்போது தீர்மானிக்கப்பட்டிருந்ததாம்.


ஆனால், அந்தத் தீர்மானத்துக்கு மாறாக, திடீரென மீண்டும் யாழ்ப்பாணத்திலேயே அத்தகைய கூட்டத்தைக் கூட்டும் முடிவு தமிழ்க் கூட்டமைப்பின் தலைமையால் எடுக்கப்பட்டிருக்கின்றது என்று கிழக்கு உறுப்பினர்கள் பொருமியிருக்கின்றனர்.


இத்தகைய சர்ச்சைகளின் பின்னணியிலேயே மேற்படி கூட்டுக் கூட்டத்தை நாளை சனிக்கிழமை நடத்தாமல் ஒத்திவைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டம் இனிப் பெரும்பாலும் மே தினத்துக்கு முன்னர் திருகோணமலையில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger