சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9 வது பிளாட்பாரத்தில் இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன்பதாவது பிளாட்பாரத்தில் இன்று காலை 7.10 மணி அளவில் பெங்களூரிலிருந்து சென்னை வழியாக கவுகாத்தி செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் 9 வது பிளாட்பாரத்திற்கு வந்தது. பயணிகள் இறங்கியும், ஏறியும் கொண்டிருந்த நிலையில், அந்த ரயிலின் எஸ்-5 பெட்டியில் உள்ள 69 வது இருக்கையின் அடியில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்தது.
இதில் ஸ்வாதி என்ற 22 வயது இளம்பெண் பலியானார். ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இவர் பெங்களூரிலிருந்து குண்டூர் செல்வதற்காக இந்த ரயிலில் பயணித்துள்ளார்.
12 பேர் காயம்
மேலும் 12 பேர் காயமடைந்ததாகவும், இவர்கள் அருகில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் பெட்டிகள் சேதம்
இந்த குண்டுவெடிப்பில் எஸ்-4 மற்றும் எஸ்-5 பெட்டிகள் சேதமடைந்தன. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் காவல்துறையினரது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
ரயில் சேவை ரத்து
இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. புறநகர் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் எழும்பூர் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment