தனது பெயரில் போலி பேஸ்புக் கணக்கு துவங்கி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு டைரக்டர் ஹரி போலீசில் புகார் அளித்துள்ளார். தமிழ், சாமி, வேல், ஐயா, சிங்கம், தாமிரபரணி உள்ளிட்ட படங்களை ஹரி இயக்கியுள்ளார். தற்போது விஷாலை வைத்து பூஜை என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கோவையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் டைரக்டர் ஹரி கோவை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-
நான் பல ஆண்டுகளாக டைரக்டராக பணியாற்றி வருகிறேன். இதுவரை எனது பெயரில் பேஸ்புக் கணக்கு எதுவும் துவங்கவில்லை. ஆனால் திரைப்பட துறையில் நான் பிரபலமாக இருப்பதால் எனது பெயரில் போலி பேஸ்புக் கணக்கு துவங்கி அதில் என் விவரங்களை தவறாக சித்தரித்து உள்ளனர். அதை சிலர் தவறாகவும் பயன்படுத்தி வருகிறார்கள்.
எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட பேஸ்புக் கணக்கை தடை செய்து இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Post a Comment