மும்பை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் திரில்லிங் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றில் ஆடும் வாய்ப்பை பெற்றுள்ளது. அன்றைய ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்களை எடுத்தது. சாம்சன் 74 ஓட்டங்களையும், நாயர் 50 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பதிலுக்கு களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 190 ஓட்டங்களை பெறவேண்டும் என்பது இலக்கு. ஆனால் பிளே ஆஃப் சுற்றுக்கு தெரிவாக வேண்டுமெனில் குறைந்தது 14.3 ஓவர்களில் இப்போட்டியை வெற்றி பெற்று கூடுதல் ரன்ரேட்டைப் பெறவேண்டும் என்பது நியதி.
ஆரம்பமே அமர்க்களமாகத் தொடங்கிய மும்பை அணி சிமொன்ஸை 12 ஓட்டங்களில் இழந்தது. மைக் ஹஸி 11 பந்துகளில் 22 ஓட்டங்களை குவித்தார். எனினும் குரேய் ஆண்டர்சன், 44 பந்துகளில் 9 பவுன்றிகள், 6 சிக்ஸர் அடங்களாக 95 ஓட்டங்களை எடுத்து மும்பை அணியை பலப்படுத்தினார். ரோகித் ஷர்மா 16 ஓட்டங்களையும், ராயுடு 30 ஓட்டங்களையும் எடுத்தனர். ஒரு பந்தில் நான்கு ரன்கள் எடுத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு தெரிவாகலாம் எனும் நிலையில் சிக்ஸர் அடித்து போட்டியை முடித்தார் ஏ.பி தாரே.
இதையடுத்து மே 27ம் திகதி முதல் காலிறுதிப் போட்டி பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையில் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரையிறுதிக்குச் செல்லும். எலிமினேட்டர் சுற்றுப் போட்டி சென்னை - மும்பை அணிகளுக்கு இடையில் நடைபெறும் இதில் வெற்றி பெறும் அணி, முதல் அரையிறுதியில் தோற்ற அணியுடன், மீண்டும் மோதும். அதில வெற்றி பெறும் அணியே இறுதி போட்டிக்கு செல்லும் மற்றைய அணியாகும்.
இதேவேளை பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் பஞ்சாப் அணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி 18.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களை எடுத்தது. கெவின் பீட்டர்சன் 58 ஓட்டங்களை எடுத்தார். பதிலுக்கு களமிறங்கிய பஜ்சாப் அணி 13.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.
Post a Comment