நாசா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பிய புகைப்படங்களில் செவ்வாய் கிரகத்தில் அந்நிய விண்கற்கள் கிடப்பதை அறிவியலாளர்கள் கண்டுள்ளனர். இவை இரும்பாலான விண்கற்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இவை பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் விழுந்துநொறுங்கிய விண்கற்களைச் சேர்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த புகைப்படங்களை நாசா செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது. இவை லெபனான் தேசத்தின் வரைபடம் போல் தோற்றமளிப்பதால் ஆறடி அகலமுடைய பெரியபொருளுக்கு லெபனான் என்றும், சிறிய பொருளுக்கு லெபனான் பி என்றும் அவர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த ஆச்சரியம் ஒருபுறம் இருக்க செவ்வாயில் விழுந்து கிடப்பது முழுமையான இரும்பு விண்கற்கள் என்பதைக் கண்டறிய துல்லியமாக உதவிய புகைப்படத் தொழில்நுட்பம் செயல்படும் விதத்தை தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படுவீர்கள். 2005ம் ஆண்டில் ஆப்பர்சூனிட்டி என்ற ரோந்து விண்கலம் கண்டு பிடித்த விண்கற்களையொத்து உள்ளன.
இவை கெம்கேம் என்ற தொலைதூர நுண்பிம்பக் கருவியால் படம் பிடிக்கப்பட்டுள்ளது. கெம்கேமில் இருந்து அனுப்பப்படும் லேசர் கதிர்கள் கற்களில் உள்ள எலக்ட்ரான்களை உசுப்பி விடுகின்றன. இதனால் அந்த எலெக்ட்ரான்கள் ஒளியை உமிழுகின்றன. இந்த ஒலியை கெம்கேமில் உள்ள தொலைநோக்கி சேகரித்து கண்ணாடி இழையாக ரோந்து கப்பலில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரோ மீட்டருக்கு அனுப்புகிறது. இந்த ஸ்பெக்ட்ரோமீட்டர் அந்த ஒளியை பகுத்தாய்ந்து அந்தக் கற்களில் உள்ள அணுக்களின் வகைகளை அடையாளம் காண்கிறது.
பூமியில் காணப்படும் விண்கற்களில் இரும்பு விண்கற்கள் அரிது என்று கூற முடியாது. ஆனாலும் அவை சாதாரண கற்களால் ஆன விண்கற்கள் போல் ஏராளமாக காணப்படுவதுமில்லை. ஆனால் செவ்வாயில் காணப்படும் விண்கற்களில் இரும்பு விண்கற்கள் அதிகமாக காணப்படுகின்றன என்பதை உறுதிசெய்துகொள்ள கெம்கேம் என்ற தொலைதூர நுண்பிம்பக் கருவியால் சாத்தியமாகியிருக்கிறது. செவ்வாயின் புகைப்படக் கலைஞன் ஓர் அறிவியல் ஆச்சரியமல்லவா?
Post a Comment