தரமான தமிழ் சினிமாவுக்காக முயன்று வரும் இயக்குநர்களில் ஒருவர் கவிஞர் சீனு. ராமசாமி. இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்துக்காக தேசிய விருது பெற்றவர். தற்போது விஷ்ணு நடித்துவரும் 'இடம் பொருள் ஏவள்' படத்தை இயக்கி வருகிறார்.
நடிகர் ஹரீஸ் ஜெயராஜ் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடித்து வெளியான 'அரிமா நம்பி' படத்தின் வெற்றிக்காக சென்னையின் ஏழு நட்சத்திர விடுதியில் 'பார்ட்டி' கொடுத்தார் விக்ரம் பிரபு. இதில் இசையமைப்பாளர் ஹரீஸ் ஜெயராஜும் இயக்குநர் சீனு. ராமசாமியும் கலந்து கொண்டனர்.
ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் இழிவான கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டதாக தெரியவருகிறது. "மூன்று கோடி ரூபாய் கார் வைத்திருந்தால் நீ பெரிய ஆள் கிடையாது. உன்னால் ஒரு தேசிய விருது வாங்க முடியுமா?" என்று சீனு. ராமசாமி திட்டியதாகவும், அதற்கு பதிலடி தரும் விதமாக "நீ நினைத்தால் கூட உன்னால் மூன்று கோடி ரூபாய் காரில் செல்லமுடியாது. ஆனால் நான் நினைத்தால் இந்த நிமிஷமே உன்னை என் காரில் ஏற்றிச் செல்லமுடியும். வார்த்தைகளை அளந்து பேசு" என்றாராம் ஹரீஸ் ஜெயராஜ்.
இவர்கள் இருவரும் இப்படி சண்டை போட்டுக்கொண்டதற்கு பின்னணிக் காரணம் என்ன என்று விசாரித்தபோது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான 'தெகிடி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சீனு. ராமசாமி பேசிய பேச்சுதான் காரணம் என்று தெரிய வருகிறது. அப்படி என்னதான் பேசினார் சீனு.ராமசாமி? “இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஹரிஸ் ஜெயராஜ் இருவரையும் சின்ன படங்களைத் தயாரிப்பவர்கள் இசைக்காக நெருங்கவே முடியவில்லை. காரணம் சின்னத் தயாரிப்பாளர்கள் தங்கள் படத்துக்கு முதலீடு செய்யும் மொத்த பட்ஜெட்டை விட இவர்கள் ஒரு படத்துக்கு வாங்கும் ஊதியம் இரண்டு மடங்காக இருக்கிறது.
"சிறு முதலீட்டில் தயாராகும் தரமான படங்களுக்கும் இவர்கள் இசையமைத்தால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்று இருக்கும். இதை இவர்கள் யோசிக்க வேண்டும். பணத்தில் மட்டுமே குறியாக இருக்கக் கூடாது” என்று காட்டமாக பேசியிருக்கிறார். இதுபற்றி பார்ட்டில் ஏற்பட்ட விவாதம்தான் விவகாரமாகிவிட்டது என்கிறார்கள் அருகில் இருந்து தகராறைக் கவனித்தவர்கள்.
Post a Comment