கமலுடன் மாதவன் இணைந்த 'அன்பே சிவம்' படத்தை தமிழ் ரசிகர்கள் மறக்கவே முடியாது. கமல், மாதவன் மீண்டும் இணைந்தால் நன்றாக இருக்குமே என்று எதிர்பார்ப்பும் இருக்கவே செய்கிறது. தற்போது மீண்டும் இவர்கள் இணைகிறார்கள். ஆனால் படத்தில் நடிப்பதற்காக இல்லை. ஒரு படத்தின் குரல் நடிப்புக்காக(டப்பிங்) இணைகிறார்களாம்.
அப்பா, மகன், பேரன் என்ற வரிசையில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாகசைதன்யா ஆகிய மூவரும் இணைந்து நடித்து தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் மனம். இந்தப் படத்தைச் சுடச்சுட தமிழில் மறுஆக்கம் செய்து வெளியிடலாம் என்று முயன்றார்கள் ஏ.வி.எம் நிறுவனத்தார்.
ஆனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களைக் கொண்ட குடும்பம் தமிழில் இல்லை. சிவாஜி, பிரபு, விக்ரம்பிரபு நடித்து தமிழில் உருவாகியிருக்க வேண்டிய இந்தப் படம் அதற்கான பெருமையை தமிழ் சினிமாவுக்குக் கொடுக்கவில்லை. இதனால் இந்தப் படத்தை அப்படியே தமிழ் பேச வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
நாகார்ஜூனாவுக்காகத் தமிழ் பேசி குரல்நடிப்பை வழங்க இருப்பவர் மாதவன். நாகசைதன்யாவுக்காக குரல்கொடுக்க சித்தார்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார். அப்படியானல் நாகேஸ்வரரவுக்கு யார்? கமல் பேசினால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து அவரை அணுகியிருக்கிறார்கள். அவரும் பேச ஒப்புக்கொண்டுவிட்டார்.
'உத்தமவில்லன்' படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் 'மனம்' படத்துக்கு குரல் நடிப்பை வழங்க வருகிறார் கமல்.
Post a Comment