‘ரோஜா’ படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்து, ‘ஸ்லம் டாக் மில்லியனைய்ர்’ படத்தின் பாடலுக்காகவும், பின்னணி இசைக்காகவும் ஒரே மேடையில் இரண்டு ‘ஆஸ்கார்’ விருதுகளை பெற்று இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் பெருமையை தரணிக்கு நினைவூட்டி, நிலைநாட்டியவர், ஏ.ஆர். ரஹ்மான்.
தமிழ் ரசிகர்களால் ‘இசைப்புயல்’ என்றழைக்கப்படும் ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்காவின் பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கின்றது.
இசை உலகில் 20 ஆண்டு காலம் பங்களித்து வருவதற்காக 24-10-2014 அன்று நடைபெறும் விழாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மேலும், வரும் காலங்களில் இந்தியாவை சேர்ந்த இளைய தலைமுறையினர் பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இசை பற்றிய ஆராய்ச்சி செய்ய ஏ.ஆர். ரகுமானின் பெயரில் உதவித்தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, பட்டம் வழங்கும் விழாவின் போது பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவான பிரபல பாடல்கள் இடம் பெறும் இசை நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
இந்த நிகழ்ச்சியை காண வருபவர்கள் வழங்கும் டிக்கெட் (நன்கொடை) கட்டணம் முழுவதும் இந்த உதவித் தொகைக்கு பயன்படுத்தப்படும் என பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Post a Comment