60 வயதைக் கடந்தவர்களை பாதிக்கும் உடல் நலப் பிரச்சினைகளில் புரோஸ்டேட் சுரப்பி வீக்கமும் ஒன்று. உற்பத்தியாகும் இனப்பெருக்க உயிரணுக்களை (விந்து) கடத்திச் செல்லும் ஊடகமான வழுவழுப்பான பனிநீர் போன்ற திரவத்தை உற்பத்தி செய்வது இந்தச் சுரப்பியின் வேலையாகும். இந்த திரவம் விந்து வெளிப்படும் முன் பெண் இன உறுப்பில் வெளியேறி, உயிரணுக்கள் எளிதாக பயணித்து கர்ப்பையை அடைய உதவி செய்கின்றன.
அந்தவகையில் இந்த திரவமும், புரோஸ்டேட் சுரப்பியும் மனிதர்களுக்கு கடவுள் அளித்த வரம் என்றே சொல்லவேண்டும். முதுமையை உடல்மெல்ல ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கும் 60 வயதைக் கடந்த வயதானவர்களுக்கு இந்த சுரப்பி வீங்குவது வயதின் கோளாறாகும். பலருக்கு 70 வயதிலும், இன்னும் சிலருக்கு 80 வயதிலும் இது ஏற்படலாம். இன்னும் பலருக்கு இந்த அறிகுறி தோன்றாமலும் இருக்கலாம். தற்போது வரை அறுவைச் சிகிச்சை மூலம் இந்த சுரப்பியை அகற்றி நோயைத் தீர்த்து வருகின்றனர்.
புதிய கண்டுபிடிப்பு ஒன்றின் மூலம் இந்த வியாதியை அறுவைச் சிகிச்சையின்றி குணமாக்கலாம் என்று இத்தாலி மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த முறை மூலம் நாய்களுக்கு குணமளிக்கப்பட்டுள்ளது. இது மனிதர்களுக்கும் பொருந்தும் என்று கருதப்படுகிறது. மின்காந்த தள சிகிச்சை முறை மூலம் நாய்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு அது வெற்றிஅடைந்துள்ளது.
இதை ஆங்கிலத்தில் பல்ஸ்ட் எலெக்ட்ரோமேக்னடிக் பீல்ட்தெரபி என்று அழைக்கிறார்கள். இந்தச் சிகிச்சை உடலில் கத்தி படுவதைத் தவிர்த்து விடுகிறது. இதனை பலவீனமான வெப்பமில்லா எலெக்ட்ரோ மேக்னடிக் பீல்ட் (மின்காந்தப்புல) அலைகள் என்று அழைக்கிறார்கள். தொலைக்காட்சி தொலைக்கட்டுப்பாட்டு கருவியை விட சற்று அகலமான ஒரு கருவிமூலம் உருவாக்கப்படும் அலைகள் உருவாக்கப்படுகிறது.
இக்கருவியை பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைத்து குணப்படுத்துகிறார்கள். புரோஸ்டேட் சுரப்பிக்குள் செல்லும் ரத்தம் குறைவதால் ஏற்படும் தொற்றின் காரணமாக இந்த சுரப்பி வீக்கம் ஏற்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் இந்தக் கருவி சாதகமாகச் செயற்படுகிறது. எனவே இது இந்த சுரப்பி வீக்கத்தை குணப்படுத்துவதுடன் மேலும் வளர்வதைத் தடுக்கும் என்று இத்தாலியில் உள்ள பாரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ரபேல்லா லியோசி கூறுகிறார்.
Post a Comment